வனப்பேச்சியிலிருந்து…. ஏப்ரல் 28, 2008
Posted by தமிழ் in கவிதை.4 comments
“சுடு சோறு கொதி கஞ்சி
வேப்பம் பழம்
பொசுக்கியதே இல்லை
ஊர் வெயில்.
குளிரூட்டப்பட்ட
நகரத்து அறைகளில் வசிக்கும்
என் மகள் கேட்கிறாள்”
………….
சுருண்டிருக்கும் சர்ப்பமென
அவசரம் புதைந்திருக்கும்
இந்நகரத்தின் எந்த வீட்டில்
குழந்தைக்கான ஒரு தூளிச்சேலையும்
வயது முதிர்ந்தவளுக்கான சுருக்குப்பையும் இருக்கிறதோ
அங்குதான் விருந்தினளாக வருவேன்
என்ற அடம் வனப்பேச்சிக்கு…
‘தீராதவள்’ மார்ச் 16, 2008
Posted by தமிழ் in கவிதை.7 comments
‘எனக்கான வார்த்தைகளை
நீ முடிவு செய்கையில்
நான் தேர்கிற மௌனம்
மிக வலிமையானது
ஒரு வயோதிகப் பிச்சைக்காரனைப்
புறந்தள்ளிய அலட்சியத்துடன்
நீ நடக்கும்பொழுது
அவனுக்கு நிழல் தரும் மரத்தின்
திடத்துடன் உன்னைச் சந்திக்கும்
உரத்த குரலெழுப்பும்
மல்யுத்த வீரனின் சவாலுடன்
நீ திமிர்த்திருக்கையில்
நடுங்கும் கைகளுடன் உணவிடும்
தாயின் கனிவுடன் உன்னை நேரிடும்
தன் இரவிற்கான போர்வையினை
ஒரு நாடோடியிடமிருந்து
இரவலாய்ப் பெற்றுக்கொண்டு
உன்னை உறுதியாய் எதிர்கொள்ளும்
தனித்து வரும்
ஒற்றை யானையின் கோபத்துடனும்
பிடிபடா வண்ணத்துப் பூச்சியின் சாதுரியத்துடனும்.